பரதேசி-a bala film. .

பலவாறான விமர்சனங்களையும் அழுத்தமாக சந்திக்கும், “சினிமாவை நான் ‘நேசிக்கிறேன்’, அது இல்லையெனில் செத்திருப்பேன்” என்று சூளுரைத்து அதனை தன் ஒவ்வோர் படத்திலும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கும் இயக்குனர் பாலா. .!

வலிகளை பதிவு செய்வதில் நுட்பமாக சிலைவடிக்கும் கைந்தேர்ந்த சிற்பி போஃல செதுக்கப்பட்ட காட்சிகள் அத்துனையுமே பாலா தன் படங்கள் எப்படிப் பட்டவை என்பதற்கு சான்று. .கமெர்ஷியல் இத்தியாதிகள் வெகு குறைவாகவே இருந்தாலும் அதுவும் தவறாமல் இருக்கும் (திணிக்கப்படும் என்றும் வைத்துக் கொள்ளலாம். .)கதையில் அடிநாதம் மேற்ச் சொன்னவைதான் என்றாலும் தற்போது தொடர்ச்சியாக இலக்கிய எழுத்தாளர்களோடு பாலா கைக் கோர்த்திருப்பது புதிய பரிணாமமே. .

அந்த பரிமாணத்தில் அடுத்த அடி பரதேசி. .

முதல்முறையாக பாலா தன் நேரடியான கதைக்களில் இருந்து கொஞ்சம் வெளியேறி தன் இயல்புகளை உடைத்து உருவாக்கிய ‘அவன் இவன் ‘ வழக்கமான ஏசல்களுடன் ஏமாற்றம் தந்தது என்ற கருத்து நிலவியது. .(விளிம்பு நிலை பற்றி இதிலும் காட்சிக் குறிப்புகள் உண்டு) அடுத்த அடியை தன் இயல்பிலேயே எடுக்க துணிந்து ஓர் நாவலை கதைக்களனாக அமைத்த துணிச்சல் பாலா போன்றவர்களுக்கே சாத்தியம். .

அப்போதைய அடிமை இந்தியாவில் மெட்ராஸ் மாகாணத்தில் மருத்துவராய் வந்த “paul harris daniel” என்பவர் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்கை முறையில் இருந்த சிக்கல்களை தான் கண்டுணர்ந்தபடி எழுத்தில் RED TEA எனும் நெடுங்கதையாய் ஆவணப்படுத்தினார். .தமிழில் ரா.முருகவேளின் மொழிபெயர்ப்பில் எரியும் பனிக்காடு என்றும் வெளிவந்த நாவலை தழுவி(திரை வடிப்புக்கு ஏற்ப மாற்றியமைத்து ) வெளிவந்திருப்பதுதான் பரதேசி. .

paradesi1 முதல் காட்சியில் ஹீரோ இன்ட்ரோ வரும் 15நிமிடங்களுக்குள்ளாக சாலூரின் மக்கள் நிரப்பப்பட்டு வாழ்வு முறைகள் உணர்த்தப் படுகிறது. .ஒட்டுப் பொறுக்கி யாக வரும் ஹீரோவின் அடுத்த சில ஷாட்டுகளிலேயே சாதாரணமான குடும்பம் ஹீரோவுக்கு கிடையாது என்று உணர்த்தப் படுகிறது. .போகப் போக ஹீரோவின் டிஸ்க்ரிப்ஷன் அமைக்கப்பட்டு ஹீரோ இனியொரு முடிவெடுத்தால் அதற்கு நாமே காரணம் சொல்லும் அளவுக்கு பாத்திரப் படைப்புகளை எலபாரேட் செய்யும் காட்சிகள் பாலாவிடம் அதிகம். .ஹீரோவின் பாசப் பிணைப்பையும்,ஒட்டுப் பொறுக்கி வாழ்பவனின் விளிம்பு நிலையையும் உணர்த்தும் அந்த திருமண விருந்து காட்சிகள். .ஆனால் கடைசிவரை அந்த பெரியாம்பளைக்கு என்ன ஆச்சு என ஹீரோ தெரிந்துக் கொள்ள முனையாதது இடிக்கிறது. .

எப்போதுமே வித்தியாசமாகவே வலம் வரும் பாலாவின் ஹீரோயின் இதிலும் உண்டு. .கேளிக்கைத் தனமான ஹீரோயின் காதல் வசப்படும் ஆரம்பக் காட்சிகள் அழுத்தமில்லையெனினும் அதன்பின் வரும் நேசம் எல்லாம் டர்னிங் பாய்ண்ட். .தன்னிலை மறந்து தன்னை இழந்துவிட்டபோதும் அதற்காக பெரிதும் மெனக்கெட ஹீரோயினுக்கு காட்சிகள் இல்லை. . பஞ்சாயத்து காட்சிகளுக்கு பின் ஹீரோ வேலை தேடி அயலூருக்கு செல்வதற்கான ஜஸ்டிஃபிக்கேஷன் அது. . ஒருவகையில் ஓரமாக பஞ்சம் பிழைப்பதை சொல்லும் கணங்கள். .

அயலூருக்கு வேலை தேடி சென்ற இடத்தில் டீக்கடை காட்சிகளில் மேலே அமர்ந்ததற்கு கிடைக்கும்அடி ,அதன் பின்னான கூலி தராமல் வலிய உடல் உழைப்பு சுரண்டப்படுதல், அங்கு நிலவும் இரட்டை குவளை முறை,ஆதிக்க சாதி திமிர் என்பதற்கெல்லாம் விஷுவலாக விளக்கம் சரி அக்கால மனங்களையும் சொல்லியாயிற்று. .

கங்காணி என்ட்ரி திரைக்கதையின் அடுத்த டர்னிங் பாய்ண்ட். .அதிலிருந்த அடுத்த கட்டத்திற்கு நகரும் கதையோட்டம், பஞ்சம் வாட்டிய வலியில் பொருள் ஆசையில்,கங்காணிகளின் மயக்கும் வார்த்தைகளில் தேயிலை தோட்ட வேலைக்கு பயணப்படுவது ஆரம்பிக்கிறது. . செங்காடே பாடல் மூலம் பயணத்தின் வலி,ஊர் விட்டு கூலிகளாக பயணப்படும் துயரம் ஜஸ்டிஃபை செய்யப் படுகிறது. .

தமிழ் படங்களில் பாடல்கள் என்பது துணிந்து செய்யப்படும் தவறுகளில் ஒன்று. .அதையும் சரியாக உபயோகித்து வெற்றி கண்டவர்களில் சிலர் மட்டுமே நல்ல திரைக்கதை கொண்டு நம்மை கவருகின்றனர். .அப்படி பாலா துணிந்தே தன் படங்களில் பாடல்களை உபயோகித்து வெற்றி கண்டவர். .சில இடங்களில் சறுக்கினாலும்,நீளமாக சொல்லவேண்டிய வலிகளை பாடல்களின் மூலமாக சாமர்த்தியமாக சொல்லிவிடலாம் என்ற நம்பிக்கை. .

சாலுரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேரும் காட்சிகளில் ‘ஓ செங்காடே’ பாடல் மாண்டேஜ் ஷாட்டுகளாக பிண்ணணியில் வலியை உணர்த்தும். .பஞ்சம் பிழைக்க போகும் மக்களின் வலிகள் வரிகளில் ஓங்கி ஒலிக்கும். .

மக்கள் சோர்வோடு இராப்பகலாக நடக்கும் போது கங்காணி கட்டைவண்டியில் சுகமாக தூங்கிக் கொண்டிருக்கு காட்சி ஆண்டைத் தனத்தின் குறியீடு. .மக்களை ஒழுங்கு படுத்திக் கூட்டிவரும் இரு காவலர்களின் ஒடுக்குமுறையிலிருந்தே ஆரம்பிக்கிறது அவர்களின் அடிமைவாசம். . 48 நாட்கள் நடைபயணம் முடிந்து தேயிலை தோட்டத்திற்குள் நுழையும்போது அங்கு வகைபிரிக்கப்பட்டு தங்க வைக்கப்படும் காட்சிகள் ஆதிக்கத்தின் வெளிப்பாடு. .சோர்ந்து மயங்கி விழும் ஒருவனை இனிதேற மாட்டான் என்று உயிர் பிரியாமல் இருக்க உதவாமல் அழுது கதறும் அவன் மனைவியை இழுத்துக்கொண்டு பயணத்தை தொடரும் அந்த காட்சியின் இறுதியில் மேக்ரோ ஷாட்டில் பயணப் படும் மக்களும் இறந்துகொண்டிருப்பவன் கையேந்தும் காட்சிளும் அடிமைகளின் வெந்த புண்ணில் ஆண்டைகளின் வேல் பாய்ச்சும் நிகழ்வுகள். .ஒன்றாக வாழ்ந்த மக்கள் தன் கூட்டத்தில் ஒருவன் சாவதைக் கண்டு கலங்கும்போது காவலர்களால் விரட்டப்படும் காட்சி அதற்கு துணை. .

ஹீரோ தனக்கென ஒதுக்கப்பட்ட குடிசையில் நுழையும் போது அங்கு குடியிருக்கு தன்ஷிகா அவனை வெளியே துரத்தியடித்து ‘இனிமே அவன் சொன்னான்,இவன் சொன்னான்னு ஆம்பிளைங்க யாரும் உள்ள வந்திங்கனா…..’ என பேசும் வசனத்திலேயே பெண்கள் மீதான பாலியல் ரீதியான கொடுமை இருக்கச் செய்கிறது என்று குறிப்பால் உணர்த்தப் படுகிறது. . பயணம் முடிந்து வந்த அடுத்த நாள் அதிகாலையில் பெரும் சத்தம் ஒன்றைக் கொண்டு எழுபப்படுகிறார்கள். . ஏற்கனவே அங்கு இருப்பவர்கள் சாதாரணமாக எழுவதும் புதிதாய் வந்த சாலூர் மக்கள் அலறி அடித்து எழுவதும் வந்த இடத்தின் வேற்றுமைகளையும்,வழக்கங்களும் புதிதாய் அமையும் அவர்களின் வாழ்க்கைமுறை வேறுபடப்போகிறது என்பதற்கான குறியீடு. .கடினமாக வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். . தேயிலைதோட்ட தொழிலார்களின் முக்கியமான பிரச்சினைகள் எடுத்துரைக்கப்படுகின்றன. .

அட்டைப்பூச்சி ஆண்டைகளின் பாலியல் தொந்தரவுகள்,கடின வேலை,குளிர்,வாழ்க்கை முறை,சுகாதாரம்,ஆண்களிடமிருந்து சுரண்டப் படும் கடினமான உடலுழைப்பு எல்லாவற்றையும் பரதேசியின் சீக்வென்சான காட்சிகள் விளக்கும். .வெள்ளைக்காரன் புதிய பெண்ணை பார்த்ததும் நடக்கும் விதம் அதற்கு பின் வரும் கங்காணியின் வசனம் அதன் தொடர்காட்சிகள்,.அடிவாங்கிவிட்டு வெள்ளைக்காரனை அவன் போனபின் தான் திட்டமுடியும் என்பதால் திட்டிவிட்டு அவன் மீதான கோபத்தையும் சேர்த்து அடிமைகளிடம் காட்டும் காட்சிகள் ஆண்டைத்தனத்தின் அதிகாரம்,செயல் பாடுகளை தெளிவாக காட்டப்பட்டிருக்கும். .அடிமைகளின் வாழ்க்கை அதிகார வர்கங்களின் கையில் அகப்பட்டுவிட்டது,பகைக்க முடியாது என்பதற்காக இணங்கிப்போய் தன் மனைவியை இரையாக்கிவிட்டு சுணங்கி அமர்ந்திருக்கும் கணவன்,அதற்கு துணைபோகும் பெண்கள் என வலிகள் நிறைந்து இருக்கும். . அவையெல்லாம் புனை காட்சிகள் அல்ல என்பது கூடுதல் வலிகள். .(அந்த செயலுக்காக ஹீரோ அவர்களை வெறுக்கிறார் என்பதற்கான ஜஸ்டிபிகேஷன் மட்டும் வேறெங்கும் காணக்கிடைக்க வில்லை. .எனக்குதான் புரியலையோ . .??) செந்நீர்தானா பாடலின் மூலம் அவர்கள் அனுபவிக்கும் வலிகள் சொல்லப்படுகின்றன.கங்கை அமரன் குரல் மட்டுமே அப்பாடலை தூக்கி நிறுத்துகிறது. .

தப்பிக்க நினைப்பவனின் கால் நரம்பை அறுத்துவிடும் செயல்,உழைப்பை சுரண்டுவதற்காக ஒவ்வோர் முறையும் ஒவ்வொரு முறையும் கூலி கொடுத்து கணக்கு முடிக்கும் போது கூலியை மருத்துவனும்,சாமியாரும் தனதாக்கிகொள்வது போன்ற எண்ணற்ற, பொய்கணக்கு காட்டி வெளியேற விடாமல் செய்வதும் பெரிய துன்பங்களை அனுபவக்கின்றனர் தொழிலாளர்கள். .

மருத்துவ வசதி அல்லாததால் மக்கள் கொடும் விஷக்காய்ச்சலில் சிக்கி கொத்து கொத்தாக மடியும் போது கூலி அடிமைகள் திரட்ட புறப்படும் காட்சிகள்,மக்கள் மடியும் கணத்திலும் தத்தமது தோட்டங்களில் எத்தனை பேர் இறந்தனர் என்ற கணக்கு கூட செய்யாமல் மக்களின் உயிர் போவதை குறைப்பால் வசனங்களில் உணர்த்தப்பட்டிருக்கும்..

மருத்துவர் என்ற போர்வையில் மதத்தினை உபதேசிக்க வரும் புது மருத்துவர் என்று அப்போது நிலவிய உண்மைகளையும் என்றும் நிலைக்கொண்டிருக்கும் சில விஷயங்களையும் சட்டென முகத்திலடித்தார்ப்போல் சொல்லும் தைரியம் உள்ளது பாலாவுக்கு புகழை விட இகழ்வை அதிகம் சம்பாத்திதுக்கொடுத்துள்ளது ..தன் படங்களில் மறைமுகமாக கமர்ஷியல் புகுத்தும் பாலாவின் கைங்கர்யம் மதம் பரப்பும் பாடலில் உண்டு. .அடிமைகள் மதம் மாற தலைப்பட்டனர் என்ற காட்சி அந்த பாடலின் ஊடே வந்தாலும் அந்த பாடல் இரண்டாம் பாதியின் கரும்புள்ளியாகவே எனக்கு தோன்றியது..

ஆகக்கடைசியாக துயரங்கள் மேலிட இன்னொரு கணக்கு முடிக்கும் நாளிலும் உடல் வலிமை உள்ளவன் என்ற காரணத்திற்காக கூலி பாக்கி காரணம் காட்டி வெளிவிட மறுத்து மீண்டும் நரகமாய் நினைக்கும் தொழிலுக்கு அனுப்பப்பட்டு விரக்தியில் ஹீரோ கதறி அழுது பொதுவில் நியாயம் கேட்கும் தருணம் அடுத்த கூட்டமொன்று அடிமைகள் கூட்டமாய் மாறி தோட்டதினில் நுழைகிறது..அதில் மனைவி மகன் இருவரையும் காண்கிறான். .மனைவில் இதுநாள் வரை கானது இருந்த சோகத்தினை விடுத்து மகிழ்ச்சி அடைய,தான் பெற்ற பிள்ளையை காண்பிக்க “இந்த குடியில் வந்து பிறந்தாயே ” என கூக்குரல் இட்டு அவன் அழும் அந்த நொடி மொத்த வலிகளையும் மேலானது . .

இரண்டாம் பாதி மிகவும் பொறுமையாக செல்கிறது என்ற குறை எல்லோரிடத்திலும் இருக்கிறது. .அந்த நிமிடம் மட்டும் வந்துமறையும் படி சொல்லாமல் நம்மால் மறக்கவே முடியாதபடி வலிகள் சொல்லப்பட்டிருப்பதுதான் அதன் சிறப்பு. .

இளையராஜா இருந்தால் நிச்சயம் இன்னும் உயரம் தொட்டிருக்க வேண்டும். . பின்னணியிலும் சொதப்பி விட்டு ராஜாவை நினைத்து அல்லடிக்கொண்டிருக்கிறது மனம். . வலிகள் தோய்ந்த வார்த்தைகளை வடிப்பது கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு எளிது தான். .

இந்த முறை கைகோர்த்திருப்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடனுடன். .வசனங்கள் கூர்மையாய் முறையாய் உருவாக்கப்பட்டிருக்கிறது. .வசனங்கள் புரியவில்லை என்றால் சில காட்சிகளின் அர்த்தமும் உல் சூட்சுமமும் புரிய வாய்ப்பில்லை.

என்வரையில் பரதேசி எதுவரை தமிழ் சினிமா உலகம் கண்ட சொற்ப முத்துக்களில் ஒன்று. . படம் பார்க்காதவர்கள் நிச்சயம் பார்த்துவிடுங்கள். .திரையரங்கில் பார்க்க வேண்டியது முக்கியம். .புரியாதவர்கள் உங்கள் பார்வையிலிருந்து படைப்பாளியின் பார்வையில் புரிந்துக்கொள்ள முயலுங்கள். .வலிகளின் விருந்து காத்திருக்கிறது . . Share this:

TwitterFacebook
*****
Written by Thilip Varadharajan on 13 March 2013